37 வருடங்களை தொட்ட  ‘முந்தானை முடிச்சு’.! ரீமேக் செய்வதில் மகிழ்ச்சி – சசிகுமார்.!

கே. பாக்கியராஜ் அவர்களின் முந்தானை முடிச்சு வெளியாகி 37 வருடங்கள் ஆகிய நிலையில், அதன் ரீமேக்கில் நடிக்கும் சசிகுமார் பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏ. வி. எம். நிறுவனத்தின் தயாரிப்பில் 1983ம் பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தின் மூலம் ஊர்வசி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இளையராஜா இசையமைத்த இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கோவை சரளா, பூர்ணிமா பாக்கியராஜ், தவக்களை சிட்டிபாபு, கே. கே. சௌந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சமீபத்தில் இந்த படத்தினை 36வருடங்கள் கழித்து ரீமேக் செய்ய போவதாகவும்,பாக்கியராஜ் அவர்கள் இயக்குவதாகவும், அதில் பாக்கியராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாகவும், ஜே. எஸ். பி. சதீஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிய நிலையில் டுவிட்டரில் #37YearsOfMundhanaiMudichu என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பலரதும் இதயத்தை வென்ற கே. பாக்கியராஜ் சாரின் முந்தானை முடிச்சு ரீமேக் செய்வதில் மகிழ்ச்சி என்றும் திரைகதையின் மாஸ்டரான பாக்கியராஜ் சார் நடித்த கதாபாத்திரத்தை மீண்டும் காண்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு ரீமேக்கிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், விரைவில் இதனை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.