மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்டு வரும் பிரதமர்..!

மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். இதனைதொடர்ந்து, அவர் ஒடிசாவில் புயல் பாதிப்புகளை காண புறப்படவுள்ளார். 

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், கடந்த 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது.  4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி, மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயலால் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாக மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த அவரை முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து வருகிறார். தற்பொழுது இதனை தொடர்ந்து, ஒடிஷா மாநிலத்திலும் புயல் பாதிப்புகளை பார்வையிட அவர் புறப்படவுள்ளார்.