பெய்ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

லெபனான் பெய்ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை.

நேற்று முன் தினம், லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இன்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்,அதில் அவர் கூறுகையில், “நேற்று முன் தினம் (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயனக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது. 25 கிமீ சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட இரசாயனக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயனத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள், இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும் 4 ஆயிரம் பேர் வரை காயம் அடைந்து உள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் மனதை கனக்கச் செய்கிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரி வித்து, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று உளமாற விழைகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து லெபனான் விரைந்து மீண்டு வரவேண்டும் மேலும் தமிழகத்திலிருந்து பணிபுரிவதற்காக லெபனான் சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.

குறிப்பாக வெடி விபத்து நிகழ்ந்த தலைநகர் பெய்ரூட்டில் வசித்து வந்த தமிழர்களை தொடர்பு கொள்ளவே முடிய வில்லை என்று அவர்களது குடும்பத்தினர் நேற்றிரவு முதல் பெரும் பயத்துடனும், பதட்டத்துடனும் உள்ளனர். எனவே தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலம் லெபனானில் உள்ள இந்தியத் தூதகரத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அங்கும் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும்.

மேலும் அவர்களது நிலை தற்போது எவ்வாறு உள்ளதென்பதனை கண்டறிந்து அது குறித்தான தகவல்களை அவர்கள் குடும்பத்தினருக்கு குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வழிவகை செய்துதரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.