திருச்சி மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளி ஒருவர் உடற்கூறு ஆய்வு செய்தது குறித்து, குடும்பநலம் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்க மாவட்ட இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.
துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த சலவைத் தொழிலாளியான வாலீஸ்புரத்தைச் சேர்ந்த வீரமணி, உடற்கூறு ஆய்வு செய்த செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
உடற்கூறு ஆய்வுக்கு சிறிதும் தொடர்பில்லாத அவர், அந்தப் பணியை மேற்கொண்டது ஏன் என கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, குடும்பநலம் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் மாவட்ட இணை இயக்குநர் ஷம்ஷாத் பேகம், வியாழனன்று துறையூர் அரசு மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கினார்.
பொறுப்பு தலைமை மருத்துவர் வேல்முருகன், பிணவறை ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கும், சுகாதாரத்துறை செயலருக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷம்ஷாத் பேகம் கூறினார்