இந்தியன் 2 விபத்து! உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கமலஹாசன்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2.  கடந்த மாதம் 20-ம் தேதி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் பலியானார்கள். 

இதனையடுத்து, நடிகர் கமலஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மார்ச் 18-ம் தேதி விபத்து நடைபெற்ற ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு நேரில் வந்து சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்ட வேண்டும் என நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

 நடிகர் கமலஹாசன் ஏற்கனவே கடந்த மூன்றாம் தேதி அன்று,  விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு வந்து சம்பவ இடத்தில் நடித்துக் காட்ட வேண்டுமென்று சம்மன் அனுப்புவது அரசியல் பழிவாங்கும் செயல் என கமல்ஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, நடிகர் கமலஹாசனுக்கு மட்டும், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்று  கூறவில்லை. விபத்தை நேரில் பார்த்த மற்ற பட குழுவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், கதாநாயகன் என்பதால் விசாரணை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வர நடிகர் கமலஹாசனுக்கு விலக்கு அளிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கமலஹாசன் வராவிட்டால்  அது, புலன் விசாரணையை பாதிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், நடிகர் கமலஹாசன் விபத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மேலும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி அலுவலகத்திற்கு ஆஜராகலாம் என்றும்,நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.