விவசாயிகளுக்காக வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..!

வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சமீபத்தில் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.150-க்கு மேல் விற்பனையானது.அதைத் தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

தட்டுப்பாட்டை போக்கி நிலைமையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து  மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. தற்போது வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டதாகவும் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஒப்புதல் அளித்த பிறகு  வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk