பதனீருக்கு ஆசைப்பட்டு பைக்கை இழந்த வாலிபர்!

உடன்குடி அருகே இலவச பதனீருக்கு ஆசைப்பட்டு பைக்கை இழந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த சிவலூரை சேர்ந்தவர் பழனியப்பன். அரசு போக்குவரத்து கழகம் செங்கோட்டை பணிமனையில் டிரைவராக பணியாற்றி வரும் இவர் மாலை பிறைகுடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரிடம் தனக்கு தெரிந்த நண்பர் தோட்டத்துக்கு பதனீர் குடிக்க செல்வதாகவும், நீங்கள் வந்தால் உங்களுக்கும் வாங்கி தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறி உள்ளார். 
இதை நம்பிய பழனியப்பன் அவரை ஏற்றி கொண்டு அருகில் உள்ள காட்டுபகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள தோட்டத்தின் வெளிப்புறத்தில் பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் தோட்டத்தின் உட்பகுதிக்கு நடந்து சென்றனர். 
சிறிது தொலைவு சென்றதும் பழனியப்பனை அங்கேயே காத்திருக்க சொன்ன மர்ம நபர் பதனீர் இறக்க மரத்தில் ஏறுபவரை அழைத்து வர செல்வதாக கூறி பழனியப்பன் பைக்கை வாங்கி சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனியப்பன் உடனடியாக இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அனைத்து செக்போஸ்டுகளையும் உஷார்படுத்தினர். 
இந்நிலையில் தைலாபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்த போலீசார் முறையான ஆவணம் இல்லாமல் வந்த பைக்கை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் ராதாபுரம் கிளாத்திகுளத்தை சேர்ந்த பரமசிவன் என்பதும் பிறைகுடியிருப்பில் பழனியப்பனை ஏமாற்றி பைக்கை திருடி வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பைக்கை கைப்பற்றிய போலீசார் அவரை கைது மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment