அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேதியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராமதிலகம் அமர்வு முன் கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”சாதராண பொதுமக்கள் மீது இது போன்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறன. ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதை அனுமதிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கேள்வி எழுப்பினர்.
மேலும் இது தொடர்பாக இன்று தமிழக அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மணல் கடத்தலை அனுமதித்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும் போது பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் “மணல் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சட்டத்தை மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது 4 வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உள்துறைச் செயலாளர், மற்றும் , டிஜிபி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும், விசாரணை ஆணையத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மணல் கடத்தல் வழக்கில் பாபு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….