கொரோனா வைரஸ் தொற்று… 2 அமைச்சர்கள் பலி… மாநில முதல்வருக்கும் தொற்று உறுதி…

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், அடுத்தடுத்து பல தலைவர்கள் பாதிக்கப்படுவதால் அரசியல் களத்திலும் கொரோனா பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்பின் தீவிரம் பெரிய அளவில் குறைந்தபாடில்லை. தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய  நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 66,732 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின்  புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் கொரோனா பெருந்தொற்றிற்க்கு பலியாகி உள்ளனர். இதில், பீகார் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கதிஹர் மாவட்டம் பிரன்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏவுமான வினோத் குமாருக்கு (55) கடந்த ஜூன் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதே போல், நாகலாந்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சி.எம். சாங்க், டைபாய்டு பாதிப்பால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நேற்று அவரது டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

author avatar
Kaliraj