சுவையான காலிஃப்ளவர் மசாலா இப்படி செய்து பாருங்கள்..!

சுவையான காலிஃப்ளவர் மசாலா எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

சப்பாத்தி, நாண் போன்ற உணவு வகைகளுக்கு வித்தியாசமான முறையில் சுவையான காலிஃப்ளவர் மசாலா செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இனி இதேபோன்ற மசாலா செய்ய குழந்தைகள் கூறுவார்கள்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன், மில்க் + க்ரீம் – 1/4 கப், கொத்தமல்லி – சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு கடாயில் எண்ணெய் 1 டீஸ்பூன் ஊற்றி அது காய்ந்ததும் சீரகம் (1/2 டீஸ்பூன்), பட்டை (1/4 இன்ச்), கிராம்பு (2), ஏலக்காய் (1), நறுக்கிய பச்சை மிளகாய்(1) சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் (அரைத்த) தக்காளி பேஸ்டை ஊற்றி அதனோடு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள், சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

5 நிமிடத்திற்குள் கால் கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது கொதித்த பின்னர் அதில் பால் மற்றும் கிரீம் சேர்த்து சற்று மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். கடைசியாக வேக வைத்த காலிஃப்ளவரை அதில் சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் மசாலா ரெடி.