வரலாற்றில் இன்று(27.02.2022)..!கற்பனை காவியம் சுஜாதா மறைந்த தினம் இன்று..!

சுஜாதா என்று அழைக்கப்பட்ட ரங்கராஜன் மே மாதம்  3ஆம் தேதி, 1935ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர்  ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்து தன்வசப்படுத்திய ஆற்றல்மிக்க கலைஞராவார். திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, பின், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பொறியியல் படிப்பை  முடித்தார். இதில்,  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிய்யாற்றினார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம்.

இவர் இயற்றியவைகளான, பிரிவோம் சந்திப்போம், அனிதாவின் காதல்கள், எப்போதும் பெண், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நிலா நிழல், ஆ, கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, கொலையுதிர் காலம், வசந்த் வசந்த், ஆயிரத்தில் இருவர், பிரியா, நைலான் கயிறு, ஒரு நடுப்பகல் மரணம், மூன்று நிமிஷம் கணேஷ், காயத்ரி, கணேஷ் x வஸந்த், அப்ஸரா, மறுபடியும் கணேஷ், வீபரீதக் கோட்பாடுகள், அனிதா இளம் மனைவி, பாதிராஜ்யம், 24 ரூபாய் தீவு, வசந்தகாலக் குற்றங்கள், வாய்மையே – சிலசமயம் – வெல்லும், கனவுத்தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், மேகத்தைத் துரத்தினவன், வைரம், ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், உன்னைக் கண்ட நேரமெல்லாம், நில்லுங்கள் ராஜாவே. இத்தகைய பல்வேறு படைப்புகளை அளித்த சுஜாதா பிப்ரவரி மாதம்  27ஆம் தேதி, 2008ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.