காணாமல் போன மருமகள் திரும்பி வர நாக்கை பிளேடால் வெட்டி காணிக்கையாக வழங்கிய மாமியார்.!

காணாமல் போன மருமகள் வீட்டிற்கு திரும்பி வர தனது நாக்கை பிளேடால் வெட்டி மாமியார் கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்க துணிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லக்சுமி நிரலா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நிரலாவின் மருமகளான ஜோதி, அவரது குழந்தையுடன் காணாமல் போயுள்ளார். வெள்ளிக்கிழமை முழுவதும் ஜோதியின் கணவரும், மாமனாரும் தேடியும் கிடைக்காமல் போக போலீசில் புகார் செய்துள்ளனர்.

மருமகள் மீது அன்பு வைத்திருந்த நிரலா அப்பகுதியில் உள்ள சிவபெருமான் கோவிலில் சென்று மருமகள் திரும்பி வர வேண்டி தனது நாக்கை பிளேடால் வெட்டி காணிக்கை கொடுத்துள்ளார். முதலில் மருத்துவமனையில் செல்ல முடியாது என்று கூறி அடம் பிடிக்க, அக்கம்பக்கத்தினர் நிரலாவை சமாதானப்படுத்தி ஜாம்ஷெட்பூரின் எம். ஜி. எம். எம். சி. எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இனி அவரால் பேச முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிரலா கணவர் கூறுகையில், யாரோ
ஒருவர் லக்சுமியிடம் கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்தால் மருமகள் திரும்பி வருவாள் என்று கூறியதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.