ஜி.எஸ்.டி இழப்பீடு… ₹.1.10 இலட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு…

மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அப்போது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் கணக்கீட்டுப்படி, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி. இதில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் 97,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதியானது மாநிலங்களுக்கு, திருப்பி செலுத்த கூடிய முறையில், ஜிஎஸ்டி இழப்பீடு வரிக்கு பதிலாக கடனாக வழங்கப்பட உள்ளது.  இதன் முதல் மற்றும் வட்டி தொகையானது இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கப்படும். மத்திய அரசின் நடப்பாண்டு பற்றாகுறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல, மாநிலங்கள், மத்திய அரசு இணைந்து வாங்கும் கடன் தொகையும் உயராது என அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.

author avatar
Kaliraj