கேரள தங்கக்கடத்தல் வழக்கு.. கைதான ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை!

ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சின் என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி அவர் எர்ணாகுளத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை என்.ஐ.ஏ நீதிமன்றம் நிராகரித்து, ஸ்வப்னா சுரேஷூக்கான ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரிடம் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி, அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சின் என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.