கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மாதிரிகளை சேகரிக்க வந்த மருத்துவ குழு மீது கல் வீச்சு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் எவ்வாறு  பாதிக்கப்பட்டார் என்பதனை கண்டறியவும், அவரது குடும்பத்தினரின் மாதிரிகளை சேகரிக்கவும் வந்த மருத்துவ குழுவினர் மீது கிராமவாசிகள் கல் வீசி தாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மோவ் நகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் அளவில் மருத்துவ குழுவை கிராமவாசிகள் கல் வீசி தாக்குதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரின் மோவ் தெஹ்ஸில் உள்ள ஜஃப்ராபாத் கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அயோத்தி வார்டில் இறந்து விட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மருத்துவ குழு பொறுப்பாளரான பிரபா கார்வே கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இறந்த அவரது குடும்பத்தினரின் மாதிரிகளை சேகரிப்பதற்காக மருத்துவ குழு கிராமத்திற்கு சென்ற போது, அங்குள்ளவர்கள் மருத்துவ குழுவினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக தனது புகாரில் கூறியுள்ளார். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் வேலை செய்வது கடினமாக இருக்கும் என்று கார்வே கூறியுள்ளார்.

இதனையடுத்து மன்சூர் காவல்துறை அதிகாரி ஹிதேந்திர ரத்தோர் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார்.