பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் – தெலுங்கானா அரசு அறிவிப்பு..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களோடு ஸ்மார்ட் போன் வழங்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல பேர் உயிரிழந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி ஏற்பட்ட இழப்புகளால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவசர கால உதவி எண்களுடன் ஸ்மார்ட் போன் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து ஹைதராபாத் மாநில நலத்துறை அதிகாரி அக்கேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளதாவது ஸ்மார்ட் போன்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, காவல்துறை உள்ளிட்ட அவசர அழைப்பு எண்கள் இருக்கும் என்றும் இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மார்ட் போன் குறித்த ஆலோசனைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 200 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.