சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் சில பதிவுகள் கிடைத்துள்ளது- ஐஜி சங்கர்!

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார்.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக அழிந்த பதிவுகளை மீட்டெடுக்கும் முயற்சி நடந்து வந்தது.

இந்நிலையில், அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த சில காட்சிகள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜ் இன்னும் இரண்டு நாட்களில் பிடிக்கப்படுவார் எனவும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸை விசாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.