இந்திய குடியரசு தினம்(26.01.2022) இன்று..! குடியரசு தினத்தின் வரலாறு..!

இந்திய குடியரசு தினம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது தேசியக் கொடி, மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவும் தான்.  இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் நம் நாட்டுக்கு  செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் மிகவும் அவசியமானதாகும். உலகிலுள்ள மக்கள் யாவரும் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றி செல்ல அவரவர் நாடு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அதிலும், நமது நாடு பழமையும் பாரம்பரியமும் மிக்க  ஒரு நாடு. தற்போது உள்ளது போல பாரதம் அந்தக் காலத்தில் தனித் தனி மாநிலங்கள் இருக்கவில்லை. இந்தியா சிற்றரசு, பேரரசு என சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து அவரவர் எல்லையைப் பொறுத்து குறுநில மன்னர்கள்,  ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை. எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும்  இதை ஆங்கிலேயர்கள்  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மன்னர்களிடம் நயவஞ்சகமாக பேசி சூழலைப் பயன்படுத்தி நமது நாட்டுக்குள் வஞ்சகமாக நுழைந்து, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். மன்னர் கால ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாக தனித்து செயல்பட முடியாது. கருத்துக்களை கூற முடியாது. ஏன் தாமாக சிந்திக்கவும் கூட முடியாது.

சுதந்திரம் பற்றி கனவு காண முடியாது. மன்னர் இறந்தால், அவருடைய நேரடி வாரிசு நேரடியாகவே அடுத்த மன்னராகிவிடுவார். இத்தகைய முடியாட்சியின் வரி வசூல் செய்த ராச்சியங்களின் கொடுங்கோன்மையால் ஏழை எளியவர்களுக்கு துன்பம் மட்டுமே மிஞ்சியது. அதன் பின் வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அளவில்லாமல் அதிகரிக்கவே அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பின் , மக்களாட்சியால் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஏற்படும் என்று முடிவு செய்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு  அதை 1950 ஜனவரி 26ம் நாள் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு நவம்பர் மாதமே தயாரான நிலையில் ஜனவரி மாதம் நடைமுறைக்கு வர ஒரு வரலாறு இருக்கிறது.

நம் சுதந்திரம் அடைவதற்க்கு முன்னர் லாகூரில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக 1930 ஜனவரி 26ல் மூவர்ண கொடியை ஏற்றி பிரகடனம் செய்தார் நேரு. இதை நினைவு கூறவே 1949 நவம்பர் 26 முடிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை ஆண்டு தோறும் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர்26 தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஜனவரி 26ஐ, நம் தாய்நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, இந்தியாவின் விடுதலைக்காக அரும்பாடு பாடுபட்ட தேசத் தலைவர்களையும், நம் மண்ணுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் நினைவு கூறும் வகையில், ஜனவரி 26-ம் தேதியன்று நம் நாட்டிற்க்கு தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா ஒரு குடியரசாக மாறிய நாள், இந்த தேசத்தின் வாழ்வில், இந்த தேசத்தில் உள்ள மக்களின் மனதில் மிக மிக முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது. இன்றைய சூழலில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் எனில், அதன் பின்னணியில் லட்சக்கணக்கான தியாகிகளின் தன்னலமற்ற சேவை இருக்கிறது. சுமார் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம். தலைமுறை தலைமுறையாக இந்த ஒற்றுமைக்காக தன்னலமின்றி பாடுபட்டு தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து இருக்கிறார்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது இங்குள்ள அனைவரது கனவு எனலாம்.

ஆனால் அது நல்லரசாக இருக்க வேண்டும் என்பதே சிறப்பாகும். நல்லரசாக மட்டுமல்லாமல் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் விதமாக, சமூக வேறுபாடுகள் அற்ற மக்களாட்சி உண்மையிலேயே ஏற்பட வேண்டும்.  இனி வரும் காலங்களில், மக்களின் வறுமையைப் போக்குவதில் நம் தேசம் சிறப்பாக பாடுபட வேண்டும் மிகப் பெரும் மக்கள் திறனைக் கொண்டு, வாழ்க்கையை இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அந்த நிலையை அடைவது  நம் கண் முன்னேதான் உள்ளது. நிச்சயம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் நம்மால் நல்ல மாற்றங்களை இந்தியாவில் நிகிழ்த்த முடியும். ஒரு தேசமாக நாம் ஒற்றுமையோடும், விழிப்போடும், கவனத்தோடும் செயல்பட்டால் இந்த கனவு நிச்சயம் ஈடேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.