மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள்..!

மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் பாட புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலா தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க மட்டுமே உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புத்தக பைகள், குறிப்பேடுகள் போன்ற இதர உபகரணங்கள் வழங்க அனுமதி கிடையாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், வழங்கப்பட்ட புத்தகப்பைகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.