Vijay Felicitates Students

நீட் வேண்டவே வேண்டாம்.! தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு.!

By

சென்னை : 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக தவெக சார்பில் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 28ஆம் தேதி விருது வழங்கப்பட்ட நிலையில், இன்று 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக விஜய் காலையிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார். 2-ஆம் கட்ட நிகழ்வில் பேசமாட்டேன் என விஜய் அன்று கூறிய நிலையில், திடீர் ட்விஸ்டாக இன்று பேசுகிறார் என தகவல் வெளியானது.

அதன்படி, மேடைக்கு வருகை தந்த விஜய், ” எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன். என்ன பேச போகிறேன் என்று உங்களுக்கே தெரியும். நீட் தேர்வு பற்றி தான் என்று தனது உரையை தொடங்கினார்.

நீட் தேர்வு பற்றி பேசிய விஜய், “நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் என்று கூறிய அவர், ஒன்றிய அரசு கால தாமதம் செய்யக்கூடாது. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் கிராமத்தில் இருக்கும் மாணவ மாணவிகள், ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே பாடம் ஒரே கல்வி என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது என்றார்.

நீட் தேர்வு குளறுபடியால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. இதற்கு நீட் தேர்வு விலக்கு அளிப்பது தான் நிரந்தரத் தீர்வு என்று கூறிஉள்ளார். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல்கள் இருக்கிறது என்றால் இடைக்காலத் தீர்வாக இந்திய அரசியலமைப்பை திருத்த வேண்டும்.

சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கும் வகையில், கல்வி மற்றும் சுகாதாரத்துறையை மாநில பட்டியலுக்கு ஒன்றிய அரசு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Dinasuvadu Media @2023