பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் 26 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்!

பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணிகள், இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்கு ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், இதில் வாங்க முடியாதவர்களுக்கு 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீடு தோறும் சென்று டோக்கன்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.