PM Modi speech in Rajya sabha

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

By

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்தினார். அதில் பேசுகையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம். சுதந்திர இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு அரசுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி வழங்கியுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல.  கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தை வளப்படுத்தியதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் உரையாற்றி கொண்டு இருக்கும் போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்கின்றனர். எங்கள் வெற்றியை இருட்டடிப்பு செய்ய எதிர்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை தலைவர் ஜன்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்பிகளை அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிபிட்டார். இருந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர் அமளிக்கு மத்தியிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். அதில், இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது பதிலுரையில் குறிப்பிட்டார். பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Dinasuvadu Media @2023