தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு.. அக்.16-ல் தீர்ப்பு!!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு, அக்.16-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கவுள்ளது.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனீ தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுள்ளதாக தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பணப் பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால், தேனி தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில், பல முறைகேடுகள் செய்து ரவீந்திரநாத் குமார் வெற்றி வெற்றி பெற்ற காரணத்தினால், அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரியும், அதில் உள்ள கோரிக்கைகளை நீக்கக் கோரியும் துணை முதல்வரின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.