சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைப்பு-அமைச்சர் மதிவேந்தன்..!

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையிலான முதல் ஆய்வு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், 18 மாத காலமாக கொரோனாவால் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் சரிவை சந்தித்துள்ளனர். இதை சரி செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் முக்கிய அடையாளமாகும். அதனால் இந்த இடத்தை இரவிலும் சிறப்பாக காணக்கூடிய வகையில் சீரொலி சீர்மிகு காட்சி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சோழர்களின் தலைநகரமாக விளங்கும் பூம்புகார் நகரின் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா காரணத்தால் தமிழகத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதலமைச்சரிடம் ஆலோசனை செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் இதை சீரமைக்கும் முயற்சிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.