ADMK Chief secretary Edappadi Palanisamy

சட்டசபைக்கு ‘நோ’.! கள்ளக்குறிச்சிக்கு விரைந்த எடப்பாடி பழனிச்சாமி.!

By

கள்ளக்குறிச்சி: மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை. அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அடுத்து, தற்போது துறை ரீதியிலான கோரிக்கைகள் மற்றும் விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 20) கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி வரையில் காலை – மாலை என இரு வேளைகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.

இப்படியான சூழலில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் பூதாகரமாக மாறி வருகிறது. இதுவரை கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஐ தாண்டியுள்ளது. மேலும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

இப்படியான சூழலில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவைக்கு செல்வதை தவிர்த்து தற்போது கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களவை நேரில் சந்தித்து பேச உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்திருந்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி வர உள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023