வனத்துறையினரால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த வழக்கு.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!

வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த முத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, 5-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. இவர் தனது விளைநிலத்தில் அரசின் விதிகளை மீறி, மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.

வனத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆன அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.

மேலும், வனத்துறையினரை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகையும், தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆயினும், சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை கைது செய்யும் வரை முத்துவின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, 5-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரின் மனைவி, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பது, குறிப்பிடத்தக்கது.