அடேங்கப்பா!! 371 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த நாசா வீரர்!

சுமார் 371 நாட்களை விண்வெளியில் கழித்த நாசா விண்வெளி ரூபியோ உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு திரும்பி உள்ளனர். விண்வெளியில் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஆராய்ச்சி முடித்த பின் இவர்கள் பூமிக்கு திரும்பினார்கள்.

நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ, ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் தங்களது ஓராண்டு விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து நேற்று (செப்டம்பர் 27, 2023) புதன்கிழமை பூமிக்கு வந்தடைந்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சோயுஸ் எம்எஸ் 23 (Soyuz MS-23) என்ற விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள் மூவரும் கஜகஸ்தான் நகரின் தென்கிழக்கே உள்ள பகுதியில் பாராசூட் உதவியுடன், பத்திரமாக நேற்று தரையிறங்கினர். வெறும் ஆறு மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட இந்த விண்வெளி பயணம் 1 வருடத்திற்கு இழுத்தடிக்கப்பட்டு பின்  நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

சுமார், 371 நாட்கள் விண்வெளியில் பயணித்த இவர்கள் மூவரும், 15 கோடி மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விண்வெளியில் ஆறு மாதம் மட்டுமே ஆய்வு செய்வதற்காக சென்ற நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோவின், ஆறு மாதக்கால பயணத்தின் போது, ரஷ்ய விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் 1 ஆண்டாக மாறி பூமிக்கு வரும் நாட்கள் தாமதமாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த நாசா விண்வெளி வீரர்களான மார்க் வந்தே ஹெய் (355 நாட்கள்) மற்றும் ஸ்காட் கெல்லி (340 நாட்கள்) ஆகியோரின் 1 ஆண்டு கால சாதனைகளை முறியடித்து ஃபிராங்க் ரூபியோ (371 நாட்கள்) இருந்து நீண்ட நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கிருந்த சாதனை மைல்கல்லை கடந்துள்ளார்.

இதன் மூலம் விண்வெளியில் அதிக காலம் இருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை ரூபியோ படைத்துள்ளார். இந்த விண்வெளிப் பயணத்தின் போது ரூபியோ, ​​பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய கருவிகளை மாற்றுதல், தொழில்நுட்பங்களை சரி செய்தல், ஆராய்ச்சி பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விண்வெளி நிலையத்தை பராமரித்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பூமிக்கு திரும்பிய பின் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ, தனது விண்வெளி பயண அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இவ்வளவு காலம் விண்வெளியில் இருக்கவேண்டும் என்று  முன்பே தெரிந்திருந்தால், நான் சென்றிருக்கவே மாட்டேன் என்று கூறியதோடு, பூமிக்கு வந்த பின் பூமியின் ஈர்ப்பு விசை உணர்வது புது அனுபவமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.