தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவில் பல்வேறு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள லோப்புரிக்கு சுற்றுலா பயணிகளின் அதிகமான வருகைக்கு காரணமாக இருப்பது அங்கிருக்கும் குரங்குகள். இதனால் இந்த குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் குரங்கு திருவிழா என்பது நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. தற்போது இந்த குரங்கு திருவிழா லோப்புரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கிட்டத்தட்ட 2 டன் பழங்கள், காய்கறிகளை விருந்தாக உண்டது. இந்த குரங்கு திருவிழாவை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இந்த குரங்குகளின் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும், நீண்ட வால் குரங்குகளான மக்காக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு இருந்ததையும் வந்திருந்த பயணிகள் கண்டு களித்தனர். சிலர் தங்களது கேமராவில் படமும் எடுத்து கொண்டனர்.