அதிமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று…. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி…

திருநெல்வேலி  மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன். இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். பின்னர் கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நெல்லை திரும்பினார். அதன் பிறகு அவர் தினமும் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்கள் பணி ஆற்றி வந்தார். பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார். மேலும் கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதியில் அனைத்து மக்களுக்கும் வீடு, வீடாகச் சென்று இலவச அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.  இந்நிலையில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று முன்தினம் திடீரென்று காய்ச்சல் மற்றும்  வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது மனைவி, 2 மகள்கள், ஒரு மகனுடன் ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், ரெட்டியார்பட்டி நாராயணனின் 2-வது மகளுக்கும், மகனுக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்களும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Kaliraj