எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளர் இன்று மாரடைப்பால் காலமானார்.!

எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளரான தரம்பல் குலாட்டி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

உலகின் மிக புகழ்பெற்ற மசாலா பிராண்டான எம்.டி.எச் மசாலாவின் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி . கடந்த 3 வாரமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தரம்பல் குலாட்டி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவர் அதிகாலை 5.30 மணிக்கு கடைசியாக மூச்சு விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1923-ல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தந்தையுடன் இணைந்து மசாலா தொழிலில் ஈடுபட்டார்.அதனையடுத்து 1947-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு , இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் முகாமில் தங்கி ,முதலில் தனது கடையை டெல்லியின் கரோல் பாக் நகரில் தொடங்கினார் . அதனையடுத்து எம்.டி.எச் மசாலா நிறுவனத்தை 1959-ல் தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் .

இவரது இந்த நிறுவனம் இந்திய மசாலா பொருட்களை இங்கிலாந்து, ஐரோப்பா,யுஏஇ,கன்னடா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.அதன் மூலம் பிரபலமான தரம்பல் குலாட்டிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.தற்போது மாரடைப்பு காரணமாக காலமான மகாஷேய்ஜி என்று அன்புடன் அழைக்கப்படும் தரம்பல் குலாட்டிக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் ,தனது வாழ்க்கையை சமூகத்திற்காக அர்பணித்த தரம்பல் ஜி-யின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.அதே போன்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா காலமான தரம்பல் குலாட்டியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தொழிலதிபர்களில் ஒருவரான தரம்பல் ஜி காலமான செய்தி கேட்டு வருத்தமடைந்ததாகவும் ,அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.