லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்? லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததாக கூறி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

அவர் கொடுத்து இருந்த அந்த மனுவில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி ஆயுத கலாச்சாரமும், முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, உள்ளிட்ட பல வன்முறை காட்சிகளை வைத்து இருக்கிறார்.

லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படங்களில் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார் எனவும் ” மனுவில் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மண்டல தணிக்கை குழு அதிகாரி, லோகேஷ் கனகராஜ் மனுதாரர் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்யவும்  உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தது. விரைவில் லோகேஷ் கனகராஜ் பதில் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.