59 சீன செயலிகளுக்கு தடை.. லைக் வீடியோ செயலி நீக்கம்- பிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்

மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.

இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக, டிக்டாக் ஹெலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகள் பிலே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 59 சீன செயலிகளை தடை செய்யக்கோரி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து, சிங்கப்பூரை சேர்ந்த பிகோ டெக்னாலஜியின் குறிகிய வீடியோ செயலியான லைக் செயலியின் பயன்பாட்டை நேற்று (வியாழக்கிழமை) முதல் பிலே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தது.

இதுக்குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்ட பிகோ நிறுவனம், இந்திய அரசாங்கத்தின் உத்தரவை நாங்கள் மதிக்கிறோம், பிலே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து லைக் செயலியை தற்காலிகமாக நீக்கியுள்ளது எனவும், இந்த விஷயத்தில் மேலும் தெளிவு கிடைக்கும் வரை இந்தியாவில் சேவையை நிறுத்தி வைக்கவுள்ளது.

மேலும், அனைத்து உள்ளூர் சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், இந்தியா முழுவதும் உள்ள பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லைக் செயலியை இந்தியாவில் இதுவரை 400 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.