இன்று மாலை மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்திக்கவுள்ள கங்கனா ரனாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இன்று மாலை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து பேசவுள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

அந்தவகையில், பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி இடிக்கப்பட்டது. தற்பொழுது அவரின் கட்டடங்களை இடிக்கக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பணிகள் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அதிருப்தி தெரிவித்தார். மேலும், முதல்வர் உத்தவ் தாக்ரேவின் முதன்மை ஆலோசகரைத் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை இன்று மாலை 4.30 மணிக்கு கங்கனா ரணாவத் சந்தித்து பேசவுள்ளார்.