ஜியோ-இன்டெல் ஒப்பந்தம்.! ரூ. 1,894.5கோடி முதலீடு, 0.39சதவீத பங்கு விற்பனை.!

ஜியோ தனது 0.39 சதவீத பங்கை இன்டெல் நிறுவனத்திற்கு ரூ. 1,894.5கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

திரைப்படம், செய்தி, இசை செயலிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றை இயக்கும் ஜியோ, மிகப் பெரிய நிதியை திரட்டியிருக்கிறது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜியோ தனது 9.99சதவீத பங்கை ரூ. 43,574 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் தனது நிதியை திரட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இன்டெல் ரூ. 1,894.5 கோடி முதலீடு செய்து ஜியோவின் 0.39 சதவீத பங்குகளை வாங்குவதாக ரிலையன்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

இது கடந்த பதினொரு வாரங்களுக்குள் ரிலையன்ஸ் குழுமத்தில் நடந்திருக்கும் 12-வது ஒப்பந்தமாகும். எனவே ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இதுவரை பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் இடம் இருந்து இரண்டு முதலீடுகளும், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே. கே. ஆர், முபடாலா, ஏ. டி. ஐ. ஏ. டி. பி. ஜி, எல் கேட்டர்டன், பி. ஐ. எஃப்  மற்றும் தற்போதுள்ள இன்டெல் ஆகிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின்  முதலீடையும் சேர்த்து ரூ. 1,17,588.45 கோடி வரை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே ஒரு நிறுவனம் திரட்டிய நிதியில் உலகின் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இன்டெல் நிறுவனம் 1991 முதல் உலகளவில் உள்ள 1,582 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 12.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.