கேரளத்து பெண்கள் போல முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த குளியல் பொடியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

பெண்கள் பொதுவாகவே முகத்தை பராமரிக்க பல்வேறு கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கு அழகாக தெரிந்தாலும் என்றும் இளமையாக பொலிவான சருமத்தை தருவதில்லை. ஆனால், கேரளத்து பெண்களின் முகம் எப்போதும் பொலிவுடன் ஜொலிக்கும். அதனாலேயே அவர்கள் இளமையாகவும் தெரிவார்கள். அப்படி பொலிவோடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சருமத்தை பராமரிக்கும் முறையே. அவர்கள் குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு முகம் மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து ஊற வைத்து பின்னர் தான் குளிப்பார்கள். அதனால் அவர்களது சருமம் வறட்சியடையாமல் மினுமினுப்பாக இருக்கும்.

மேலும் அவர்கள் சோப்பை அதிகமாக பயன்படுத்துவதில்லை. குளியல் பொடியை தான் குளிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த குளியல் பொடியை எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளலாம். முதலில் நீங்கள் சோப்பு போட்டு குளிக்க விரும்பினால் குளித்து விட்டு பின்னர் இந்த குளியல் பொடியை பயன்படுத்துங்கள். ஏனென்றால் இந்த பொடியை போட்டு குளித்த பின்னர் சோப்பு போடுவது நல்ல பலன் கொடுக்காது. குளியல் பொடிக்கு தேவையான பொருட்கள் பச்சை பயிறு – 50 கிராம், மைசூர் பருப்பு – 50 கிராம், பாதாம் – 6, சிவப்பு சந்தனம் தூள் – 15 கிராம், ரோஜா இதழ் பொடி – 15 கிராம், கடலை மாவு – 15 கிராம், அரிசி மாவு – 15 கிராம், குங்குமப்பூ – 1 சிட்டிகை.

இதனை மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள். கொரகொரப்பாக இருந்தாலும் சரி அல்லது நைசாக அரைத்து வைத்து கொண்டாலும் சரி. அது உங்கள் விருப்பம். இதனை உங்களுக்கு தேவையான அளவு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு முகம் மற்றும் உடல் முழுவதும் 5 நிமிடம் தேய்த்து பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். அவ்வளவு தான் அழகான பொலிவான சருமம் தோன்ற ஆரம்பிக்கும். இதனை தினமும் நீங்கள் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். அல்லது வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்துங்கள். உங்களது சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும்.