மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மாபெரும் வெட்கக் கேடு,மாறாத தலைகுனிவு  என்று மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக  மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?
‘ஜனநாயகப் படுகொலை’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ – நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? – பாஜக சித்து விளையாட்டு என்பதா?

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! என்று தெரிவித்துள்ளார்.