“கூகுள் பே” செயலிக்கு ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் தேவையில்லை- கூகுள்!

கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை என கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, போன்ற வேலைகளை செய்யலாம்.

அவ்வாறு வரும் பணம், நேரடியாக உங்கள் வாங்கி கணக்கு செல்லும். இந்த நிலையில் கூகுள் பே செயலி, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறைமை வழங்குநராக செயல்படுவதாகவும், இது இந்தியாவின் கட்டணம் மற்றும் தீர்வு சட்டத்துக்கு எதிரானது என பொருளாதார நிபுணர் அபிஜித் மிஸ்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இருதரப்பு வாதங்களும் நடந்தது. மேலும், கூகுள் இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூகுள் நிறுவனம், கூகுள் பே செயலி, கட்டண முறைமை ஆபரேட்டர் இல்லை எனவும், மூன்றாம் நபர் பயன்பாடு செயலி (Third party app) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை எனவும், கூகுள் பே போன்ற மூன்றாம் நபர் பயன்பாட்டு செயலிகளின் சேவை நெட்வொர்க்கில் பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு, முழு ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) நெட்வொர்க், அங்கீகாரம் அளித்துள்ளதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்க, மனுதார் அபிஜித் மிஸ்ராக்கு நீதிபதிகள் காலஅவகாசம் அளித்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.