TVK Vijay

விஷச்சாராய விவகாரம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- தவெக தலைவர் விஜய் கண்டனம்!

By

கள்ளக்குறிச்சி : விஷசாராய மரணங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என தவெக தலைவர் விஜய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்து வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதன்கிழமை (19) விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30 பேர்  உயிரிழந்துள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனத்தையும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023