சாத்தான்குளம் விவகாரம்.! ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் – மனிதநேய ஜனநாயக கட்சி.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான மு. தமிமுன் அன்சாரி , ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் பங்கு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான எம். எல். ஏ. மு. தமிமுன் அன்சாரி கூறியதாவது,

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் துன்புறுத்தி படுகொலை செய்த சம்பவம் இன்றுவரை பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலு‌ம் நம் ஜனநாயக அமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவால் தான் விசாரணைக்கு சென்ற நீதிபதியே அச்சுறுத்திய சம்பவம். இச்சம்பவம் குறித்து தினம் தினம் வரும் தகவல்கள் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தந்தை மகன் படுகொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆஃப் என்ற போலீஸ் அமைப்பும் ஈடுப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளனதாகவும் கூறப்படுகிறது. மேலும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு எதற்காக, எந்த நோக்கத்திற்காக, யாரை கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இச்சம்பவம் மூலம் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீதும் பொது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது மனித உரிமை மீறல்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பும் ஈடுப்பட்டுள்ளதாக கூறுவதால் தமிழக அரசு இதனை குறித்து விளக்கத்தை அளிப்பதோடு, இந்த ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும், இது குறித்து அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.