முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி உடல்நலக்குறைவால் காலமானார்!

முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரான அர்ஜுன் சரண் சேத்தி, உடல்நலக்குறைவால் நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் சரண் சேத்தி, கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு, எட்டு முறை மக்களவை எம்.பி.யாக தேர்வானார். அதுமட்டுமின்றி, ஒடிசா மாநில சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இறுதியாக, கடந்த 2019ம் ஆண்டு பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் 79 வயதாகும் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.