குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி.. டெல்லி காவல்துறை அனுமதி!

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 11 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. வேளாண் சட்டங்களுக்கு தற்காலிகமான தடை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயினும், வேளாண் சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

மேலும், குடியரசு தினம் வரும் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விவசாயிங்களின் இந்த பேரணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டு, இதுகுறித்து முடிவெடுக்க டெல்லி காவல்துறையை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சிங்கு, தக்ரி, காசிப்பூர், பால்வார், சாஜகான்பூர் ஆகிய 5 இடங்கள் வழியாக டெல்லியை நோக்கி 100 கி.மீ. வரை நடைபெறவுள்ள விவசாயிகள் நடத்தும் மாபெரும் டிராக்டர் பேரணிக்கு பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த 2 லட்சம் டிராக்டர் வரை பங்கேற்கும் என விவசாய சங்கத்தினர் உறுதியாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த டிராக்டர் பேரணி நடக்கும் வழித்தடம் குறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் பரிசீலனை செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.