பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்! திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.!

பிரபல திரைப்பட இயக்குனர் K. விஸ்வநாத் ஐதராபாத்தில் நேற்று நள்ளிரவில் உடல்நலக் குறைவால் காலமானார்.

சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னணி திரைப்பட இயக்குனரான 92 வயதான காசிநாதுனி விஸ்வநாத், சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்துக்கு மாற்றப்பட்டது.

பிப்ரவரி 19, 1930 இல் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சங்கராபரணம், சிறீ சிரி முவ்வா, சப்தபதி, சுபலேகா, சாகரசங்கம் ஆகியவை இவரது படைப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.

விஸ்வநாத் இயக்கி, கமல்ஹாசன் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான சுவாதிமுத்யம், 59வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக அறியப்பட்டது. ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், ஏழு நந்தி விருதுகள், தென்னிந்திய விருதுகள் மூலம் 10 பிலிம்பேர் ஆகியவற்றை வென்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு அவருக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.

இவர் தமிழிலும் யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன், ராஜபாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் பழம்பெரும் திரைப்பட இயக்குநரின் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எல்லா காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் முதலிடத்தில் விஸ்வநாத் இருப்பதாக ஆந்திர முதல்வர் கூறினார். சந்திரசேகர் ராவும் விஸ்வநாத்தின் படைப்புகள் அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கும் என்றார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment