ADMK Chief secretary Edappadi Palanisamy

முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.! இபிஎஸ் கண்டனம்.! 

By

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி 36 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தமிழக சட்டப்பேரவை தொடங்கும் நாளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அங்கு செல்லாமல், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண வந்து இருந்தார். இங்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மாநில அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு உயர் அதிகாரிகள் பணியில் இருந்தும், கள்ளச்சாராயம் விற்கப்பட்டு அதனை அருந்தி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி வருகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இன்று  உயிரிழப்பு எண்ணிக்கை கூடியிருப்பது வேதனை அளிக்கிறது.

காவல்நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில், ஆளும்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்புலமாக இருக்கின்றனர். இது கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சிகிச்சையில் அதிகமானோர் இருக்கின்றனர். இதுவரை சிபிசிஐடி விசாரணையில் யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை.

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்திகுமார் தொலைபேசி வாயிலாக 5 நாட்களுக்கு முன்னரே காவல் கண்காணிப்பாளரிடம் கள்ளச்சாராயம் குறித்து புகார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் அதன் மீது விவாதம் நடத்தவில்லை. தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினே ஒருமுறை அவரது கட்சி கூட்டத்தில் சொல்கிறார். விடிந்ததும் கட்சியினர் என்ன பிரச்சனை கொண்டு வருவார்கள் என தெரியவில்லை என பேசுகிறார். அக்கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Dinasuvadu Media @2023