தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.! குடும்பத்திற்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணம் – ஆந்திர முதல்வர்.!

கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் நடந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவர்ணா பேலஸ் என்ற ஓட்டல் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

அந்த தீ விபத்தில் 7பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மீட்பு துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் நடந்த இந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது, தீ விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.