“கொரோனா மறந்தாச்சு.. இயல்பு நிலை வந்தாச்சு.. திரையரங்கு என்னாச்சு.. “-முதல்வரிடம் கேள்வி எழுப்பி போஸ்ட்ர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.!

கொரோனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை கண்டித்து திரையரங்குகள் திறந்தவுடன் மாஸ்டர் படம் ரிலீஸாகும் என்று தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் தியேட்டர் திறக்கப்படாததால் தள்ளி போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள தளபதி ரசிகர்கள் திரையரங்குகள் திறப்பது எப்போது என்று முதல்வர் பழனிசாமிக்கு கேள்வி எழுப்பிய வண்ணம் போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

தளபதி விஜய்யின் ரசிகர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்களின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே மற்றும் புரட்சி தலைவியே என்று கூறி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம். ஜி. ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சமீபத்தில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்த போதிலும் திரையரங்குகள் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த மதுரையில் உள்ள ரசிகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், அதிமுகவின் கொடி வண்ணத்தையும் பயன்படுத்தி ‘கொரோனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கு என்னாச்சு என்ற வசனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது அந்த போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.