ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடத்தை திறந்து வைத்தார் – முதல்வர் பழனிசாமி

தலைமைச் செயலகத்தில், உள் போக்குவரத்து துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக்கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார் .

இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், உள் போக்குவரத்து  துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்து துறை அலுவலக செயலாக்கப் பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான அன்றாடப் பணிகளை அருகிலேயே உள்ள அலுவலகங்களில் மேற்கொள்ள ஏதுவாகவும், புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகத்தினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், தேவையான வசதிகளுடன் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இயக்கூர்திகள் சட்டங்கள் மற்றும் நிருவாக மானியக் கோரிக்கையின் போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் தேர்வுத் இத்துடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் வேடசந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு திண்டுக்கல் சி. சீனிவாசன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆய், கூடுதல் தலைமைச் செயலாளர் போக்குவரத்து ஆணையர் திரு. தென்காசி க. ஜவஹர், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.