சிவசங்கர் பாபாவை சுஷீல் ஹரி பள்ளியில் விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிசிஐடி..!

சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபாவை சுஷீல் ஹரி பள்ளிக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சாத்தாங்குப்பம் பகுதியில் இருக்கும் சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகிய சிவசங்கர் பாபாவை நீதிபதி அம்பிகா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், சுஷீல் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கே சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின்னர், இன்று அல்லது நாளை இவரை பள்ளிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.