விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி போராட்டம்.!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமெரிக்கர்கள் கலிபோர்னியாவில் கார் பேரணி நடத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா , குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 11-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு சில எதிர் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே டெல்லியில் விவசாயிகள், மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிகாகோவில் சீக்கிய அமெரிக்கர்கள் அமெரிக்க முழுவதும் உள்ள பல நகரங்களில் அமைதியான எதிர்ப்பு பேரணிகளை நடத்தியுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக கலிபோர்னியாவில் உள்ள பே பிரிட்ஜிலிருந்து இந்திய துணை தூதரகத்தை நோக்கி கார் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து வசதிகள் தடுக்கப்பட்டது. மேலும் பலர் இந்த பேரணிக்காக இண்டியானாபோலிஸ் நகரத்தில் கூடி விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இந்திய தூதரகம் முன் பல அமெரிக்கர்கள் ஆர்பாட்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சீக்கிய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் விவசாயிகள் இல்லையென்றால் உணவு இல்லை என்றும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஈடுபட்டனர்.