#Breaking:”உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம்;யாராலும் என்னை நீக்க முடியாது” – ஓபிஎஸ் பதிலடி!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

மேலும்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் தொண்டர்கள் தற்போது ஈபிஎஸ் அவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரது ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில்,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் அட்டவணை இன்று இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,சற்று முன்னதாக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு ஓபிஎஸ் வருகை புரிந்துள்ளார்.அப்போது,புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்றும்,அவர்களின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்.தொண்டர்களுக்காகவே நான், தொண்டர்களுடனே நான் என்றும் இருப்பேன்.எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் 50 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று,30 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக அவர்கள் நல்லாட்சி நடத்தி உள்ளார்கள்.

ஆனால்,இன்றைக்கு உள்ள அசாதாரணமான சூழல் யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்த சதி வலை பின்னப்பட்டது என்று கூடிய விரைவில் மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள்.அவர்கள் செய்த தவறுகளுக்கு மாண்புமிகு புரட்சித் தலைவர் மற்றும் அம்மா அவர்களது தொண்டர்கள் உரிய பாடத்தை,தண்டனையை வழங்குவார்கள்.அதே சமயம்,எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களது தொண்டர்களின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது.ஏனெனில், பன்னீர்செல்வம் போன்ற தொண்டரை பெற்றது எனது பாக்கியம் என்று அம்மா அவர்களே எனக்கு சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்,இதை விட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை.எனது எதிர்காலத்தை அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்களும்,மக்களும் நிர்ணயிப்பார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து,அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை  தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுத்தியதை தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment