தொடரும் சர்வர் பிரச்சனை.. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்!

சர்வர் பிரச்சனை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தநிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பதிவு செய்து, பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில், இணையதள சர்வரை சரி செய்யும் வரையில் பயோமெட்ரிக் முறையை ஒத்திவைக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தவகையில், இன்று காலை முதல் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தங்களின் ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.